சனி, 4 டிசம்பர், 2010

வரலாற்றுச் சுவடுகளில் வரலாற்று பிழை...!

“தினத்தந்தியில வந்தா சரியாத்தான் இருக்கும்” இது தமிழ்நாட்டு வாசகர்களின் ஆணித்தரமான நம்பிக்கை. அப்பேர்பட்ட தினத்தந்தி ஒரு வரலாற்று நூலை வெளியிடுகிறதென்றால் எதிர்பார்ப்புக்கு பஞ்சம் இருக்குமா என்ன? வளர்ந்துவரும் வாசகன் என்ற அடிப்படையில் தினத்தந்தியின் “வரலாற்றுச் சுவடுகள்” நூலின் மீது எனக்கும் இருந்தது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. அதனை சற்றும் பொய்யாக்காமல் கடந்த 30ம் தேதி (30.11.2010) வெளியிடப்பட்டது “வரலாற்றுச் சுவடுகள்”. சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் தினத்தந்தியின் இயக்குனர் பா. சிவந்தி ஆதித்தன் முன்னிலையில் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூலை வெளியிட தமிழறிஞர் வா.செ.குழந்தைசாமி பெற்றுக்கொண்டார்.





இந்த நூலை எப்படியாவது வெளியானவுடன் வாங்கி படித்துவிட வேண்டும் என்று நினைத்திருந்த எனக்கு 3வது நாளில்தான் புத்தகம் கிடைத்தது. நீண்டகாலமாய் வரலாற்று புத்தகங்களை தேடிக்கொண்டிருந்த எனக்கு “வரலாற்றுச் சுவடுகள்” ஒரு புதையல் போலவே தெரிந்தது. புரட்ட புரட்ட புரண்டு கொண்டிருந்த 864 பக்கங்கள், 308 கட்டுரைகள், பக்கத்துக்கு பக்கம் வண்ணப்படங்கள் என வரலாற்று பொக்கிஷம் என்று சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது இந்த புத்தகம். எடுத்த எடுப்பிலேயே அட்டை டூ அட்டை படிப்பதையே வழக்கமாக கொண்டதால் (முன், பின் அட்டைகளின் உள் மற்றும் வெளிப்பக்கங்களை முதலில் படித்துவிடுவேன், அதுதான் அட்டை டூ அட்டை) எனக்கு இந்த புத்தகத்தில் ஏதோ ஒன்று குறைவதைப்போல பட்டது. ஒருமுறைக்கு இருமுறை புரட்டிப் பார்த்தபோதுதான் புரிந்தது நூலின் தலைப்புக்கு கீழே இடம்பெறும் நூலாசிரியர் பெயர் இடம் பெறவில்லை என்பது. ஒருவேளை செய்தித்தாளில் வெளிவந்த தொடரின் தொகுப்புதானே என்று நினைக்கத் தோன்றினாலும் அதற்கான குறிப்புகளும் அந்த வரிசையில் இல்லை.(சந்தேகமிருந்தால் புத்தகத்தை வாங்கி பார்க்கவும்) ச்சே... ச்சே... தினத்தந்தி வெளியிட்ட நூலில் இப்படி ஒரு குறையா? இருக்கவே இருக்காது என்ற அதீத நம்பிக்கையில் மறுபடியும் தேடினேன். இம்முறையும் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது நூல் வெளியீட்டு விழாவிலும் அதுகுறித்த வார்த்தைகள் ஒலிக்கவேயில்லை. மீண்டும் யோசித்து பார்த்தபோதுதான் புரிந்தது, விழாவில் பங்கேற்ற விருந்தினர்கள் உள்பட அனைவரும் தினத்தந்தியையும், அதன் அதிபர்களையும் வானளாவ புகழ்ந்தார்களே தவிர, நூலாசிரியர் குறித்து மருந்துக்கூட வாய்திறக்கவில்லை என்ற உண்மை. சரி தினத்தந்தி வெளியிட்ட செய்தியிலாவது அரிய ஆவணங்களை தொகுத்த ஆசிரியரின் பெயரை கண்டுபிடித்துவிடலாம் என்று நினைத்து பேப்பரை புரட்டினால் (01.12.2010ஆம் தேதி இதழ்) அங்கும் ஏமாற்றமே. ஆறுமணிக்கு நடைபெற்ற விழாவை 3 மணிமுதலே தொகுத்து வெளியிட்ட தினத்தந்தி வரலாற்றுச் சிறப்பை தனக்கு பெற்றுத்தந்திருக்கும் நூல் ஆசிரியரை ஏனோ மறந்துவிட்டது. என்னடா இது ஒரு சிறந்த நூலை படித்துவிட்டு அதன் ஆசிரியரை பற்றி தெரிந்துகொள்ளாவிட்டால் எப்படி? என ஆர்வம் உந்த நண்பர்களிடம் வரலாற்றுச் சுவடுகளின் ஆசிரியர் குறித்து விசாரித்தேன். அப்போதுதான், மூத்த பத்திரிக்கையாளர் ஐ. சண்முகநாதன் அவர்கள்தான் இந்த புகழுக்குச் சொந்தக்காரர் என்பது தெரிந்தது. நண்பர்களிடம் எனது ஆர்வத்தை பகிர்ந்து கொண்டபோதுதான் தெரிந்தது சண்முகநாதன் ஐயா எழுதிய “ஒரு தமிழனின் பார்வையில் இருபதாம் நூற்றாண்டு வரலாறு” மற்றும் “கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம் வரை உலக வரலாறு” ஆகிய நூல்களுக்கு கிடைத்த வரவேற்பு. அதனால் அந்த புகழே போதுமென தன்னடக்கத்துடன் இருந்திருக்கலாம் என்றும் நண்பர்கள் வாயிலாக அறிந்தேன். “தன்னடக்கம் பேணுதல் சான்றோர் குணம்” என்றாலும் “உழைத்தவர்களை உயர்த்தி பேசுவதுதானே ஆன்றோர்க்கு அழகு” என்ற கேள்வி மட்டும் ஏனோ எனக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. விழாவிற்கு வந்து வாழ்த்தியவர்களுக்கு வேண்டுமானால் அவரின் பெருமை தெரியாமல் போயிருக்கலாம் (அல்லது தெரிந்தும் பேசாதிருந்திருக்கலாம்). ஆனால் தனக்கு புகழை தேடித்தந்தவரை தினத்தந்திக்கு தெரியாதா என்று சிலர் கேட்டுவிட்டால்? இது உழைப்புச் சுரண்டல் என்று பேசிவிட்டால்? அது நான் நேசிக்கும் தினத்தந்திக்கு அவப்பெயராகிவிடுமே என்ற அச்சத்தில்தான் இதனை இங்கே பதிவு செய்கிறேன். பாரம்பரியமிக்க தினத்தந்தியின் வரலாற்றில் இத்தகைய தவறுகள் வரலாற்று பிழையாக மாறிவிடும் என்பதை உரியவர்கள் உணரவேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.

“ நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே”

ஞாயிறு, 28 நவம்பர், 2010

ராகுல் பார்முலா தோல்வி ! தி.மு.க.வுக்கு லாபமா...?



“ வளர்ச்சிப் பாதையில் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்” பீகார் மக்கள் அளித்திருக்கும் ஒருவரி தீர்ப்பு இது. கடந்த 2 மாதங்களில் 6 கட்டங்களாக நடைபெற்ற பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 24ஆம் தேதி வெளியாகின. இதில் பீகாரின் தற்போதைய முதல்வர் நிதீஷ்குமார் தலைமையில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க கூட்டணி அமோக வெற்றிபெற்றது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் இக்கூட்டணி 206 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.நிதீஷ்குமார் கட்சி சிறிது முயற்சித்தால் தனித்தே ஆட்சியமைக்கும் அளவுக்கு 115 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.



இத்தேர்தலில் அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான லாலுபிரசாத் - ராம்விலாஸ் பாஸ்வான் கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 243 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியும் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக பல தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். நிதீஷ்குமாரின் வெற்றி எந்தளவுக்கு நாடுமுழுவதும் பேசப்படுகிறதோ அதைவிட அதிகமாக பேசப்படுவது காங்கிரஸ் கட்சியின் தோல்விதான். இதற்கு காரணம் ராகுல்காந்தியின் ‘செல்வாக்கையும்’, பேச்சையும் நம்பி காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டதுதான். தனித்து நின்றால் கட்சியின் செல்வாக்கு அதிகரிக்கும் என்ற ராகுலின் கருத்தை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் இணைந்திருந்த லாலு கூட்டணியை உதறிவிட்டு தனித்து போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங், ராகுல்காந்தி ஆகியோர் தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர். குறிப்பாக ராகு¢காந்தி 25 தொகுதிகளை தேர்வு செய்து சூறாவளி சுற்றுப்பணயம் மேற்கொண்டபோது மக்கள் கூட்டம் அலைமோதியது.ஆனால் எந்த கூட்டமும் வாக்காக மாறவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த 25 தொகுதிகளில் ஒன்றில் கூட காங்கிரஸ் வெற்றிபெறவில்லை.




இந்த படுதோல்வியால் அதிர்ச்சியடைந்துள்ள காங்கிரஸ் தலைமை பீகாரில் மீண்டும் கட்சியை அடிப்படை கட்டமைப்பில் இருந்து கட்டி எழுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. பீகார் தேர்தல் முடிவுகளை பொறுத்தே அடுத்துவரும் தமிழகம் உள்ளிட்ட மாநில சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு அமையும் எதிர்பார்க்கப்பட்டதால் இத்தோல்வியை அக்கட்சியினர் பெரும் பின்னடைவாகவே கருதுகின்றனர்.இதனால் அடுத்து நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ‘விஷப்பரிட்சையை மேற்கொள்ள துணியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.




இதனை சரியான சந்தர்ப்பமாக கருதும் திமுகவும் காங்கிரஸ் கட்சியை நம்பி நாங்கள் இல்லை என உணர்த்த நினைக்கிறது. இதன் அறிகுறியாகவே பீகார் தேர்தல் முடிவுகள் வெளியான 24ஆம் தேதி மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற வேளாண் கருத்தரங்கில் பேசிய முதலமைச்சர் கருணாநிதி “தேவைப்பட்டால் மத்திய அரசில் இருந்து ஒதுங்கி இருப்போம்” என சூசகமாக கூறினார்.




அரசு சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் முதலமைச்சர் அரசியல் பேசியதை ஆச்சர்யத்துடன் பார்க்கும் அரசியல் நோக்கர்கள், பீகாரில் காங்கிரஸ§க்கு ஏற்பட்ட பின்னடைவு தமிழகத்திலும் ஏற்பட்டுவிடும் என்று எச்சரிக்கும் வண்ணமாகவே முதல்வர் பேசியதாக கருதுகின்றனர். ராகுலின் செயல்பாடுகளை வைத்தே தமிழகத்தில் திமுகவை மிரட்டிவரும் அக்கட்சித் தலைவர்களுக்கு பதிலடி கொடுக்க இதுவே தருணம் என்பதை உணர்ந்துதான் முதலமைச்சர் அப்படி பேசியதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. மொத்தத்தில் பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் மீதும், ராகுல்காந்தி மீதும் திமுகவிற்கு இருந்த மறைமுக அச்சத்தை சற்று குறைத்துள்ளதாகவே கருதப்படுகிறது. அதேநேரத்தில் குஜராத், கர்நாடகா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தோல்வியடைந்தபோதும் ராகுல்காந்தி பார்முலா பீகாரில் முன்னெடுக்கப்பட்டதைபோல் தமிழகத்திலும் பின்பற்றப்படும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் பணியுமா? அல்லது மீண்டும் பாயுமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்கமுடியும்.

சனி, 13 நவம்பர், 2010

வென்றது ஜனநாயகம்... மலரும் மக்களாட்சி...!


”தருமத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும்
” என்ற கூற்றை நிரூபித்து இருக்கிறார் உலகின் ஒட்டுமொத்த ஜனநாயகவாதிகளின் நம்பிக்கை நட்சத்திரமான ஆங் சான் சூகி. வசதியுடன் வாழ்வதற்கான அனைத்து வாய்ப்புகள் இருந்தும் தன் நாட்டு மக்களின் விடுதலைக்காக போராடிய இவரை அடக்கி ஆள முற்பட்டனர் மியான்மர் ராணுவ ஆட்சியாளர்கள். ஆனால் தொடர் போராட்டத்தின் விளைவாக உலகின் ஒட்டுமொத்த பார்வையையும் தன் நாட்டை நோக்கி ஈர்த்தார் சூகி.

விளைவு 1962ஆம் ஆண்டுமுதல் நடந்தேறிய ராணுவ ஆட்சிக்கு முடிவு கட்டும் கனவுடன் 1990-ல் நடைபெற்றது மியான்மர் பொதுத் தேர்தல். இத்தேர்தலில் ஆங் சான் சூகியின் ”ஜனநாயகத்திற்கான விடுதலை முன்னணி” 82 விழுக்காடு இடங்களில் அபாரவெற்றி பெற்றபோதும் ராணுவ ஆட்சியாளர்கள் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்த மறுத்தனர். அதனை எதிர்த்த ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். கடந்த 21 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் சூகியை வீட்டுக்குள் அடைத்த கொடுங்கோலர்கள், அவரது கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்கக்கூட அனுமதி மறுத்தனர்.


அத்தனையையும் பொறுத்துக்கொண்டு ஜனநாயகப்போராட்டமே வெற்றிக்கு வழி என செயல்பட்ட சூகிக்கு அமைதிக்கான நோபல் பரிசும், இந்தியாவின் நேரு விருதும் வழங்கப்பட்டது. எத்தனை விருதுகள் வழங்கப்பட்டபோதும், ஐ.நா. அவை மற்றும் உலக நாடுகள் வலியுறுத்தியபோதும் சூகியை விடுதலை செய்ய மறுத்த ஆட்சியாளர்கள், ஐ.நா. பொதுச்செயலாளர் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கக்கூட அனுமதிக்கவில்லை.
இவ்வளவுக்கும் இடையிலும் மக்களிடம் ஜனநாயக ஆட்சிக்கான தாகம் குறைந்துவிடாமல் காத்துவந்தார் ஆங் சான் சூகி. இதற்காகவே அவருக்கு பலமுறை வீட்டுக்காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது. கடைசியாக விதிக்கப்பட்ட 18 மாத காவல் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து வேறு வழியின்றி அவரை விடுவிக்க ஒப்புக்கொண்டனர் ராணுவ ஆட்சியாளர்கள். இதன்படி நேற்றுமாலை யங்கூன் நகரில் உள்ள சூகி வீட்டின் முன்பு இருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு விடுவிக்கப்பட்டார் சூகி. 7 ஆண்டுகளுக்கு பின்னர் முதல்முறையாக வீட்டைவிட்டு வெளியேறிய ஜனநாயக தேவதையை மியான்மரே திரண்டு உற்சாகத்துடன் வரவேற்றது.



சூகியின் விடுதலைக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துக்களும் வரவேற்புகளும் குவிந்த வண்ணம் உள்ளது. கைது செய்யப்பட்டாலே கத்தி கூப்பாடு போடும் நம்மூர் அரசியல்வாதிகளைப்போல் ஆட்சியாளர்கள் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்காமல் விடுதலையானவுடன் தனது அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு தயாராகிவிட்டார் சூகி. ஜனநாயக ஆட்சியை வென்றெடுக்க ஒற்றுமையுடன் ஓரணியில் திரண்டு போராட வேண்டும் என்ற அவரது அழைப்பை மியான்மர் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். உலகத் தலைவர்களால் ஜனநாயகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் என்று போற்றப்படும் ஆங் சான் சூகியின் பின்னால் நாடே அணி திரண்டால் மியான்மரில் மக்களாட்சி மலரும் நாள் வெகுதூரத்தில் இல்லை...!

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

வியாழன், 28 அக்டோபர், 2010

அறிமுகம்

அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் வணக்கம்...